ஹரியானா தேர்தலில் திடீர் திருப்பம்- ஆம் ஆத்மியை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவர ராகுல் மும்முரம்!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கிவிட்டது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இறுதி நேரத்தில் கூட்டணி மைத்த வியூகத்தை ஹரியானாவிலும் ராகுல் காந்தி கையில் எடுத்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ந் தேதி தேர்தல் நடைபெறும் என முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் தொடர்ச்சியான விடுமுறைகள் வருவதால் வாக்குப் பதிவு சதவீதம் குறையும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் அச்சம் தெரிவித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதின.

இதனையடுத்து ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. அன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசுவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. அத்துடன் காங்கிரஸ் தனித்தே ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் என்பதும் கருத்து கணிப்பு முடிவுகள். இதனால் ஆளும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒன்றிணைக்க ஆம் ஆத்மி கட்சியையும் கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஆம் ஆத்மியைப் பொறுத்தவரையில் 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்து களமிறங்கிவிட்டது. ஆனாலும் பாஜகவின் வெற்றிக்கு சிறிய வாய்ப்பு கூட தரக் கூடாது என முனைப்பில் இருக்கும் ராகுல் காந்தி ஆம் ஆத்மியையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரிலும் இதே போல தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டி என அறிவித்து வந்தது. ஆனால் ஶ்ரீநகருக்கு சென்ற ராகுல் காந்தி நேரடியாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை கூட்டணி அமைத்தார். இதே வியூகத்தைத்தான் ஹரியானாவிலும் ராகுல் காந்தி கையில் எடுத்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications