விவசாயம் தெரியாத ராகுலுக்கு பிரதமராகும் தகுதி இல்லை: பஞ்சாப் முதல்வர் பாதல்
பதின்டா: விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இல்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க.-அகாலிதளம் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இதனை பிரகாஷ் சிங் பாதல் தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார் பாதல்.
அப்போது அவர் பேசியதாவது :-
‘கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் கிராமத்தில் வாழும் ஒரு நாட்டில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி அறியாதவரால் ஆட்சி செய்ய முடியாது. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ள மறுத்ததால் தொழிற்துறைகள் முடங்கியுள்ளன. பஞ்சாப் விவசாயிகள் ரூ.32,000 கோடி கடனில் சிக்கி தவித்து வருகின்றனர்.
உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு பங்களிப்பை அளித்து வரும் பஞ்சாப்பிற்கு காங்கிரஸ் பரிசு தருவதற்கு பதிலாக பாரபட்சமான அணுகுமுறையை கையாளுகிறது. ராகுல் காந்திக்கு அரசியலில் அனுபவம் கிடையாது. நாட்டின் அடிப்படை நிலப்பரப்பை பற்றியும் தெரியாது. நம் நாட்டிற்கு தற்போது உறுதியான தலைமை தேவை. அதற்கு மோடி ஒருவரே நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்".என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.