கேரள ஆன்லைன் விபச்சார விவகாரம்: ராகுல் பசுபாலன்- ரஷ்மி ஜோடியின் பங்கு என்ன?- ஐஜி ஸ்ரீஜித் பேட்டி
கொச்சி: கேரளாவையே சமீபத்தில் உலுக்கியுள்ள ஆன்லைன் விபச்சார விவகாரத்தில் கைதாகியுள்ள ராகுல் பசுபாலன் - ரஷ்மி ஜோடியின் பங்கு குறித்து, அந்த மாநில குற்றப்பிரிவு ஐஜி ஸ்ரீஜித் விளக்கியுள்ளார்.
கேரளாவில் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கும்பலை கேரள போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.
‘ஆபரேசன் பிக் டாடி' என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் கேரளாவில் முத்தப்போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடல் அழகியுமான ரஷ்மி ஆகியோரும் சிக்கினர்.
இந்த கும்பல் பிடிபட்ட பின்பு இவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்டவர்களில் சிறுமிகளும், குடும்பப் பெண்களும் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்படி விசாரணையை ஆரம்பித்தீர்கள்?
ஆன்லைன் விபசாரத்திற்கு மூளையாக செயல்பட்ட ராகுல் பசுபாலன்-ரஷ்மி தம்பதியர் குறித்து அந்த மாநில குற்றப் பிரிவு ஐஜி ஸ்ரீஜித் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 2015-ல் திருவனந்தபுரம் சைபர் பிரிவுக்கு ஒரு புகார் வந்தது. அதில் கொச்சு சுந்தரிகள் என்ற பேஸ்புக் பக்கம் மூலம் ஆபாசப் படங்கள் பரவுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அந்தப் பக்கத்தை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் நிர்வகித்து வந்தார். அந்தப் பக்கத்தை உடனடியாக முடக்கினோம்.
பின்னர் இரண்டாவது புகார் வந்தது. அதில் கொச்சு சுந்தரிகள் பக்கத்தின் பாப் அப் விளம்பரம் வருவதாக குறிப்பிட்டிருந்தனர். இதை மீடியாவுக்கு முதலில் சொல்லாமல் விசாரணையைத் தொடங்கினோம். 11 பேரைக் கைது செய்தோம். அப்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது, இவர்கள் கொச்சு சுந்தரிகள் என்ற பேஸ்புக் பக்கத்துடன் ஒரு விபச்சார வெப்சைட்டும் வைத்திருந்தார்கள்.
மூவர் உதவி...
இதில் போலீசுக்கு உதவ மூன்று பேர் முன்வந்தனர். அவர்களை வைத்து முதலில் அநாமதேயக் கணக்குகள் தொடங்கி முதலில் பேச வைத்தோம்.
காஸர்கோடைச் சேர்ந்த அக்பர் என்பவனை அப்படித்தான் பிடித்தோம். அவன் மூலம்தான் இந்த கும்பல் சிக்கியது.
5 பெண்கள் வேண்டும்
முதலில் கஸ்டமர்கள் போல நடித்து, எங்கள் க்ளையன்டுக்கு 5 பெண்கள் வேண்டும் என்று கேட்டோம். அதில் ஒருவர் மாடல் அழகியாகவும், ஒரு பெண் மைனராகவும் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்க, அதை ஏற்று உடனே 5 பேரை ஏற்பாடு செய்வதாகக் கூறி படங்கள் அனுப்பி வைத்தான் அக்பர். அப்படி அனுப்பப்பட்ட பெண்களில் ஒருத்திதான் ரஷ்மி.
ரஷ்மியை 'அனுப்பி'வைத்த பசுபாலன்..
ரஷ்மி யாரென்று முதலில் தெரியாது. அக்பர்தான் அவளைப் பற்றி நிறையச் சொன்னான். அப்போதுதான் ராகுல் பசுபாலன் பற்றிச் சொன்னான். பசுபாலன் ஒத்துழைப்புடன்தான் ரஷ்மி விபச்சாரம் செய்வதாகக் குறிப்பிட்டான்.
ரேட்...
இந்த 5 பெண்களில் ரஷ்மிக்கு ரேட் ரூ 80000, 16 வயசுப் பெண் கன்னிப் பெண் என்பதால் அவளுக்கு மட்டும் ரூ 1,50,000 என பேசினான். குறைக்கச் சொல்லிக் கேட்டபோது, ரஷ்மிக்கு மட்டும் ரூ 60000-க்கு ஒப்புக் கொண்டான். தான் அனுப்பும் 16 வயசுப் பெண்ணின் வயதுக்கான ஆதாரமாக ஆதார் அட்டையைத் தருவதாக வாக்களித்தான் அக்பர்.
ரஷ்மியின் பங்கென்ன?
ரஷ்மிக்கும் இந்த ஆன்லைன் விபச்சாரத்துக்குமான தொடர்பை அக்பர்தான் எங்களுக்கு அம்பலப்படுத்தினான். அவனைக் கைது செய்து விசாரித்த போது ரஷ்மிக்கும் தனக்குமான வாட்ஸ் ஆப் உரையாடல்களைத் தந்தான். அதில்தான் ரஷ்மி எந்த அளவு இந்த நெட்வொர்க்கில் இருக்கிறாள் என்பது தெரிந்தது. ரஷ்மியும் ராகுல் பசுபாலனும் இணைந்து பல பெண்களை விபச்சாரத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் மைனர் பெண்களை ராகுல் பசுபாலன் ஏற்பாடு செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
வேறு சில பார்ட்டிகளுக்கு ரஷ்மியும் ராகுலும் அக்பரிடம் பெண்கள் வேண்டுமெனக் கேட்டுள்ளனர். அந்தப் பெண்களை அன்வரும் அனுப்பி வைத்திருக்கிறான். ஆனால் அவர்கள் மைனர்கள்தான் என அன்வர் சொல்கிறான்.
ஒரே இரவில் எல்லோரையும் நாங்கள் கைது செய்துவிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் காத்திருந்தோம்.
அக்பரை வைத்து நாடகமாடி ரஷ்மியை ஒருமுறை வரவழைக்க முயன்றபோது, அவள் தன் அம்மா லோக்கல் தேர்தலில் போட்டியிடுவதால் பிரச்சாரத்துக்குச் சென்றுவிட்டாள். பின்னர் தீபாவளி வந்துவிட்டது. அதன்பிறகு இப்போதுதான் பிடித்தோம்.
ராகுலும் ரஷ்மியும் வயது வந்தவர்கள்... செக்ஸை தொழிலாக செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்பது குறித்து?
என்னைப் பொருத்தவரை ராகுல் பசுபாலன் ஒரு குற்றம் செய்யத் தூண்டுதலாக இருந்தவர் என்பேன். பல செக்ஸ் குற்றங்களின் காரணகர்த்தா அவர்தான். தன் மனைவியை வைத்து வியாபாரம் செய்தவர். தன் மனைவியின் செக்ஸியான படங்களை பேஸ்புக்கில் ஏற்றி ஆள்பிடித்திருக்கிறார். இது குற்றமே. மைனர்களை செக்ஸ் குற்றத்தில் ஈடுபட வைப்பது எத்தனைப் பெரிய குற்றமென்று பசுபாலனுக்குத் தெரியாதா?
இவ்வளவுக்கும் காரணம் அந்த கிஸ் ஆப் லவ் அமைப்புதானே?
எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.