ரயில்வே பட்ஜெட்... பயணிகள் கட்டணத்தை உயர்த்துவாரா? தவிர்ப்பாரா? அமைச்சர் சுரேஷ் பிரபு!
டெல்லி: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த பட்ஜெட்டிலேயே புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடங்களில் புதிய ரயில்களை இயக்கிய பிறகுதான் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என சுரேஷ்பிரபு தெரிவித்திருந்தார். இதனால் இன்றைய ரயில்வெ பட்ஜெட்டிலும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இருக்காது எனத் தெரிகிறது.
ஆனால், புதிய ரயில்கள் மட்டுமின்றி இந்த ரயில்வே பட்ஜெட்டில் வேறு சில முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவையாவன...
கட்டண உயர்வு:
ரயில்வே பட்ஜெட் தாக்கல் என்றாலே கட்டண உயர்வு இருக்குமா என்பது தான் மக்களது மனதில் எழும் பெரிய கேள்வி. காரணம் சாலைப்போக்குவரத்தை விட கூடுதல் வசதிகளோடு, சொகுசான பயணத்தைத் தருவது ரயில்கள். எனவே பல்வேறு தரப்பட்ட மக்களும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்தச் சூழ்நிலையில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே கட்டண உயர்வு இருக்கக்கூடாது என்பது தான் மக்களின் விருப்பம்.
நிதித்தேவையில் ரயில்வே...
ஆனால், வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்து வருகிறது. ஆனபோதும், பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிக்க மேலும் பணியாளர்களை நியமிக்க வேண்டி, 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் அளிக்க என பெரும் நிதித்தேவையில் உள்ளது ரயில்வே துறை.
மாநிலத்தேர்தல்கள்...
அதற்காக இவை அனைத்தையும் பயணிகள் தலையில் சுமத்தினால் அதனை எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சிக்க காரணமாக எடுத்துக் கொள்ளும். இன்னும் சில மாதங்களில் 5 மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது பாஜக அரசுக்கு சாதகமான பலனைத் தராது.
பயணிகளைப் பாதிக்காத வருவாய்...
இதனால், விளம்பரம், உபரி நிலங்களை வணிகப் பயன் பாட்டுக்கு மாற்றுவது என பயணிகளைப் பாதிக்காத வகையில் வருவாய் ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தனி இயக்குநரகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.
சரக்கு போக்குவரத்து...
இதேபோல், சமீபகாலமாக தனியாரின் ஆதிக்கத்தால் ரயில்களில் சரக்கு புக்கிங், சரக்கு கையாள்வது போன்றவை வெகுவாக குறைந்துவிட்டன. இதனால் ரயில்களில் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சுரேஷ் பிரபு இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு...
பயணிகளின் பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்களும் இன்றைய பட்ஜெட்டில் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ரயில் பயணங்களில் பயணிகளின் பாதுகாப்பு, விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை போன்றவை தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
கூடுதல் வசதிகள்...
ரயில் பெட்டிகளை மேம்படுத்துவது, ரயில்களில் இணையதள வசதி அளிப்பது, ரயில் நிலையங்களில் வசதிகளை அதிகரிப்பது, சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துதல், தண்ணீரை மறுசுழற்சி செய்தல், மின்மயமாக்கல், எல்இடி விளக்குகள் பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவை தொடர்பான அறிவிப்புகளும் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது.
தனியாரின் பங்களிப்பு...
இது மட்டுமின்றி ரயில்வே துறையில் தனியார் துறையினர் பங்களிப்பை அதிகரிக்கும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுமார் 400 ரயில் நிலையங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்துவது தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூய்மை இந்தியா...
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளில் பயோ-டாய்லெட் அமைப்பது, அனைத்து பெட்டிகளிலும் குப்பைத்தொட்டி வைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் இன்று பட்ஜெட்டில் அமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டூ இன் ஒன்...
இதேபோல் டீசல் மற்றும் மின்சாரத்தில் என இரண்டு முறைகளிலும் இயங்கக்கூடிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இன்றைய பட்ஜெட்டில் வெளியாகலாம்.