”குளிர்சாதன பெட்டிகளின் திரைச்சீலைகள் நீக்கம்” - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
டெல்லி: பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக ரயிலில் ஏசி பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள திரைகள் நீக்கம் செய்யப்பட உள்ளன.
இதனால் பயணிகள் பெரும் விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக திரைகள் பொருத்தப்படுவது கடந்த 2009 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஏசி பெட்டியில் தீவிபத்து:
கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குளிர்சாதன பெட்டியில் தீப்பிடித்தது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கமிஷன் அறிக்கை:
விசாரணையைத் தொடர்ந்து ரயிலில் குளிர்சாதன பெட்டிகளில் ஜன்னல் திரைகளைத் தவிர்த்து பிற திரைகளை அகற்றி விடலாம் என ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.
பரிந்துரை நிறைவேற்றம்:
இதுபற்றி ரயில்வே வாரியம் கடந்த 12 ஆம் தேதி கூடி விவாதித்தது. அதன் முடிவில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரையை அடுத்து மூன்றடுக்கு பெட்டிகளில் திரைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணி மனைகளில் அகற்றம்:
இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரயில்வே வாரியத்தின் முடிவு அனைத்து மண்டல ரயில்வேகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பராமரிப்புக்காக பணிமனைகளுக்கு செல்கிறபோது இந்த திரைகளை அகற்றி விடுவார்கள்" என தெரிவித்தார்.
பாதுக்காப்பு வலுப்படும்:
ரயில்களில் மேலும் விபத்து பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக வரும் 24-25 தேதிகளில் 2 நாள் சர்வதேச கருத்தரங்குக்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நடக்கிற இந்த கருத்தரங்கில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வல்லுனர்கள் கலந்துகொள்கிறார்கள்.