நசுங்கிய உடல்.. இன்ஜின் - ரயில் பெட்டி இடையே சிக்கிய ரயில்வே ஊழியர்.. உயிரே போச்சு
பாட்னா: பீகார் மாநிலத்தில் லக்னோ - பரானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் மற்றும் இன்ஜினை இணைக்கும் கப்ளிங்கை ரயில்வே ஊழியர் பிரித்து கொண்டிருந்தார். அப்போது முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி வந்த இன்ஜின் அவர் மீது மோதியது. இதனால் ரயில்வே பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
ரயிலில் இன்ஜின் முதல் ஒவ்வொரு பெட்டிகளையும் இணைக்கும் வகையில் ‛கப்ளிங்' இருக்கும். இன்ஜின் மாற்றம், பெட்டிகள் மாற்றத்தின்போது இந்த ‛கப்ளிங்' பிரிக்கப்படும்.

இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு லக்னோ - பராணி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 15204 ) புறப்பட்டது. இந்த ரயில் இன்று பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பராணி ரயில் நிலையத்துக்கு வந்தது.
அப்போது அங்கு சமஸ்தீர்பூர் மாவட்டம் தால்சிங்சாராய் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் அருண் குமார் ராவத் (வயது 35) என்பவர் பணியில் இருந்தார். லக்னோ - பராணி ரயிலில் இருந்து கப்ளிங் பிரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். ரயிலில் பார்சல் பெட்டி மற்றும் இன்ஜினை இணைக்கும் வகையில் ‛கப்ளிங்கை' அவர் தயார் செய்தார்.
இந்த சமயத்தில் இன்ஜினை இயக்கிய டிரைவர் முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி இயக்கினார். அப்போது இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே பணி செய்த அருண் குமார் ராவத் மீது இன்ஜின் மோதியது. இதனால் அவர் ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே சிக்கினார். அவரது உடல் நசுங்கியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கத்தினர். இந்த சத்தம் கேட்டதும், ரயில் இன்ஜினை விட்டுவிட்டு அதன் டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபற்றி அறிந்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருண் குமார் ராவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் ரயில்வே ஸ்டேஷனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சோனப்பூர் டிஆர்எம் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் பணி செய்யும் இடத்தில் நடக்க கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications