அடுத்த 5 ஆண்டுகளில் 'டிக்கெட்டை' முழுமையாக 'கிழித்து'ப் போட ரயில்வே முடிவு!
பெங்களூர்: அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வே துறை காகிதமில்லாத நிர்வாகமாக மாற்றம் செய்யப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரயில்வே துறையில் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம், கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ரூ.25 லட்சத்துக்கு மேல் இ-டெண்டர்
எனவே, ஊழலை ஒழிக்கும் நோக்கில், ரூ. 25 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பொருள்களைக் கொள்முதல் செய்தால், அவற்றை இ-டெண்டர் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட் வசதி
தினந்தோறும் சுமார் 2.3 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆன்லைன் மூலம் நிமிடத்துக்கு 7200 பேர் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டிருந்தது. இதை நிமிடத்துக்கு 1,20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் அதிகரித்துள்ளனர்.

காகித பயன்பாடு தவிர்ப்பு
இதுதவிர அலைபேசி சேவைகள் மூலமாகவும் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாக படிப்படியாக இன்னும் ஐந்தாண்டுகளில் காகிதமே பயன்படுத்தாமல் டிக்கெட் பெறும் வசதி முழுமையாக அமல்படுத்தப்படும்.

ஊழல் நடைபெறாது
ரயில்வே துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இந்தத் துறையில் எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் கண்காணித்து வருகிறேன். ஆட்சி நடத்துபவர்கள் பாரபட்சமில்லாமல் இருந்தால், நிர்வாகமும் பாரபட்சமின்றி இருக்கும். இவ்வாறு சதானந்த கெளடா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications