ஓலா, உபேர் பாணியில் வசூலில் குதிக்கும் ரயில்வே.. ராஜ்தானி, துரந்தோ ரயில் கட்டணம் 50% உயர்கிறது
டெல்லி: ஓலா, உபேர் டாக்சி நிறுவனங்களை போன்று ரயில்வே துறையும் டிக்கெட் கட்டண வசூலில் மாற்றம் கொண்டு வருகிறது. அதன்படி ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களின் டிக்கெட் கட்டணம் 10 முதல் 50 சதவீதம் வரை உயர்கிறது.
அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களின் டிக்கெட் கட்டணம் நாளை முதல் உயர்கிறது. நடப்பு நிதியாண்டில் இந்த ரயில்களின் மூலம் ரூ.500 கோடி வருமானம் ஈட்ட இந்த புதிய கட்டண உயர்வை ரயில்வே துறை அறிமுகம் செய்கிறது.
இந்த புதிய கட்டண முறைப்படி மக்கள் 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒரு ரயிலின் முதல் 10 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ள சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும்.

டிக்கெட்
முதல் 10 சதவீத இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் விற்றப் பிறகு அடுத்த ஒவ்வொரு 10 சதவீத இருக்கைகளுக்குமான டிக்கெட்டுகளின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும். டிக்கெட் விலைகள் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.

கட்டணம்
மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் முதல் 10 சதவீதம் மட்டுமே அடிப்படை கட்டணத்திற்கு கிடைக்கும். அதன் பிறகு 11 முதல் 20 சதவீத டிக்கெட்டுகளின் விலை 1.1 மடங்கும், 21 முதல் 30 சதவீத டிக்கெட்டுகளின் விலை 1.2 மடங்கும், 31 முதல் 40 சதவீதம் வரை 1.3 மடங்கும், 41 முதல் 50 சதவீதம் வரை 1.4 மடங்கும், 51 முதல் 60 சதவீதம் வரை 1.5 மடங்கும் அதிகரிக்கும். அதிகபட்சமாக 1.5 சதவீதம் வரை தான் விலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை முறை
புதிய கட்டண முறை சோதனை அடிப்படையில் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களின் இரண்டாம் வகுப்பு ஏசி, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளிலும், துரந்தோ ரயில்களின் ஸ்லீப்பர் வகுப்புகளிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல் வகுப்பு ஏசி மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கான டிக்கெட் விலை ஏற்கனவே அதிகமாக இருப்பதால் அதன் கட்டணம் உயர்த்தப்படாது.

ரயில்கள்
இந்தியாவில் மொத்தம் 42 ராஜ்தானி ரயில்கள், 46 சதாப்தி ரயில்கள் மற்றும் 54 துரந்தோ ரயில்கள் உள்ளன. கட்டண உயர்வு மூலம் ரூ.500 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது ரயில்வே துறை. கடந்த நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடியாக இருந்த பயணிகள் ரயில்களின் வருவாயை ரூ.51 ஆயிரம் கோடியாக்க ரயில்வே துறை முயற்சி செய்கிறது.

ஓலா, உபேர்
ஓலா, உபேர் டாக்சி நிறுவனங்கள் பீக் அவர்களில் இரண்டு, மூன்று, நான்கு மடங்கு வரை கூட கட்டணத்தை உயர்த்தி லாபம் பார்க்கின்றன. தற்போது ரயில்வே துறையும் ஓலா, உபேர் பாணியில் செயல்பட உள்ளது.












Click it and Unblock the Notifications