ஒசூர், பெங்களூரில் விடியவிடிய கொட்டி தீர்த்த கன மழை.. தாய்-மகள் உட்பட 3 பேர் பரிதாப சாவு
பெங்களூர்: பருவமழையின் தீவிரத்தால் கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரு மற்றும் அருகே அமைந்துள்ள தமிழக தொழில் நகரம் ஒசூர் ஆகியவற்றில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்தது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, தாய், மகள் உட்பட மூன்று பேர் ஒசூரில் உயிரிழந்தனர். பெங்களூரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பெங்களூர் நகரில் நேற்று முன்தினம் மாலையில் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கன மழை தொடங்கி விடியவிடிய கொட்டியது.
இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒசூரிலும் மழை
ஒசூரிலும் மழை வெளுத்து வாங்கியது. அங்கு இரவு 2 மணி நேர இடைவெளியில் 14.1 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கி தாய், மகள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல இடங்களில் வெள்ளம்
ஒசூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மூக்கண்டபள்ளி, அன்னை சத்யா நகர், மஞ்சுநாத் நகர், ஈஸ்வர் நகர், ஜெய்நகர், கேசிசி நகர் மற்றும் நாம்நகர் பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடுகள், வர்த்தக கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மூவர் பலி
ஒசூர் சாலைகளில் 2 அடி உயரத்திற்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இறந்தவர்களில் இரு பெண்கள் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர்கள். மேலும் ஒருவர் அண்ணா நகரை சேர்ந்தவர்.
விவரம்
எஸ்எம் காலனி அருகே 2 பெண்களின் சடலம் மற்றும் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. இறந்த பெண்மணி வனிதா (40) மற்றும் அவரது மகள் தர்ஷினி (20) என தெரியவந்தது. மற்றொருவர் அண்ணா நகரை சேர்ந்த 26 வயது இளைஞர் நந்தகுமார் ஆகும். சிப்காட் போலீசார் விசாரிக்கிறார்கள்.