பெங்களூரில் பெய்த பேய் மழை! சாலைகளில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல்.. இன்றும் மழைக்கு வாய்ப்பு
பெங்களூர்: பெங்களுரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது நகரின் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நகரின் கிழக்குப் பகுதியில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது. கேஆர்புரம், ஒயிட்பீல்ட் போன்றவை இதனால் அதிகம் பாதிக்கப்பட்டன இடியுடன் கூடிய மழை பெய்த போதிலும் காற்றின் வேகம் குறைவான அளவு இருந்ததால் மரங்கள் விழுந்த சம்பவங்கள் அதிகம் இல்லை. மல்லேஸ்வரம், ஜெயநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே மரங்கள் விழுந்த புகார் மாநகராட்சிக்கு வந்துள்ளது.

பெங்களூரில் கடந்த வாரமும் கடுமையான மழை பெய்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ரயில் அல்லது பஸ் நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்து விடுமாறு பயணிகளை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் ஞாயிறு வரை விடுமுறை என்பதால் பயணிகள் ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் இன்று மாலையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications