சூறைக்காற்றுடன் சுழன்று அடித்த மழை.. ஸ்தம்பித்தது இந்தியாவின் ஐடி தலைநகரம்!
பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழையால், நகரமே ஸ்தம்பித்தது. மெல்லமெல்ல, இன்று காலைதான் இயல்பு வாழ்க்கை அங்கு திரும்பியுள்ளது.
பெங்களூருவில் நேற்றிரவு சுமார் 6.30 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை கொட்டத் தொடங்கியது. இந்த மழையோடு காற்றும் வேகமாக வீசியது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோர் சாலையோரங்களில் பைக்குகளை நிறுத்திவிட்டு கடைகளுக்குள் தஞ்சமடைந்தனர். காரில் செல்வோருக்கும், சாலையே தெரியாத அளவுக்கு, பலத்த காற்றுடன் மழை குறுக்கிட்டது. மணிக்கு 21 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த மழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. கேஜி ரோட்டில் கட்டிடம் இடிந்து மத்திய பஸ் நிலையமான மெஜஸ்டிக் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாவு
கொரகுண்டேபாளையா என்ற பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் முனிவெங்கடப்பா என்பவர் உயிரிழந்தார். சாலையில், முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆலங்கட்டி மழை
யஷ்வந்த்பூர், மத்திகெரே, ஹெப்பால், யலகங்கா போன்ற பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்த்துள்ளது. சுமார் ஒரு செ.மீ நீளத்துக்கு அந்த கட்டிகள் இருந்தன. மழையையும் பொருட்படுத்தாது, ஆலங்கட்டி மை கட்டிகளை எடுக்க மக்கள் தெருக்களில் அலைமோதினர்.

52 மி.மீ மழை
காற்று மற்றும் மழை காரணமாக, நகரின் பல பகுதிகளில் 45 மரங்கள், 15 மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்தன. இரண்டே மணி நேரத்தில் நகரில் 52 மி.மீ மழை கொட்டி தீர்த்தது. எனவே, தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மழை மேலும், இரு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. பகலில் வானம் தெளிவாக இருக்கும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications