சத்தீஸ்கரில் 15 வயது சிறுமியை மிரட்டியே 8 மாதமாக பலாத்காரம் செய்த மைனர் உள்ளிட்ட 3 பேர்
ராய்பூர்: சத்தீஸ்கரில் 15 வயது சிறுமியை 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் மிரட்டி 8 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் அவுட்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது சஞ்சய் யாதவ்(23), முகமது அர்மான் அன்சாரி(23) மற்றும் 16 சிறுவன் ஆகியோர் வீடுபுகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அந்த 3 பேரும் சிறுமியை மிரட்டி மிரட்டியே 8 மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
அதன் பிறகே சிறுமி 8 மாதங்களாக நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவரது பெற்றோர் கோர்பா காவல் நிலையித்தில் இது குறித்து புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.