நான் இன்னும் ஓய்ந்து போகவில்லை.. டெல்லியிலிருந்து சேதி அனுப்பிய ராஜபக்சே!
டெல்லி: நான் ஓய்ந்து போகவில்லை. மீண்டும் வருவேன் என்று டெல்லியிலிருந்து இலங்கைக்கும், ஈழத்திற்கும் சேதி அனுப்பியுள்ளார் ராஜபக்சே. பிரதமர் நரேந்திர மோடியை அவர் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிந்து போய் விட்டது, இனியும் அவர்களால் தலை தூக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சே கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தான் இன்னும் அழிக்கப்படவில்லை என்பதை ராஜபக்சே நிரூபித்துள்ளார்.
மேலும், இந்தியாவைப் போலவே இலங்கையிலும் எதிர்க்கட்சிகள் வலுவடைய ஆரம்பித்துள்ளன என்பதையே இது காட்டுகிறது. இந்த நிலையில்தான் சுப்பிரமணியம் சாமியின் விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் ராஜபக்சே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதிலிருந்து:

ஒரே நாடுதான்
ஒரே நாடு என்ற எனது அகண்ட பார்வை இன்னும் போகவில்லை. அப்படியேதான் இருக்கிறது. பல்வேறு மொழி கலாச்சாரம் இருந்தாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதையே நான் இப்போதும் வலியுறுத்துகிறேன்.

தமிழர்களுடன் விவாதிக்க ரெடி
அரசியல் மற்றும் அரசியல் சட்ட சீரமைப்பு குறித்து தமிழ் மற்றும் முஸ்லீம் தலைவர்களுடன் பேசுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இதுதொடர்பான தீவிர விவாதங்களுக்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

வெளித் தலையீடு தேவையில்லை
இலங்கை சிறுபான்மையினர் (தமிழர்களையும், முஸ்லீம்களையும் சொல்கிறார்) மறு சீரமைப்பு, மறு வாழ்வு தொடர்பான எந்த உடன்பாடாக இருந்தாலும், தீர்வாக இருந்தாலும் அது இலங்கையிலிருந்து வருவதாக இருக்க வேண்டும். இதில் வெளியிலிருந்து வரும் தீர்வுகளை நாங்கள் விரும்பவில்லை. காரணம், சொந்த விறுப்பு வெறுப்புகளைக் கலந்துதான் வெளியிலிருந்து வரும் தீர்வுகள் அமையும் என்றார் ராஜபக்சே.

மீண்டும் அதிபராவாரா
இந்தியாவில் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல இலங்கையிலும் அதே ஆண்டு அதிபர் தேர்தல் வரவுள்ளது. இதில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராஜபக்சேவை போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சிகளில் சிறிசேனா அரசு இறங்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இலங்கையில் எந்த சூழல் ஏற்பட்டாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றவே இந்தியா முயலும். அந்த அடிப்படையில் ராஜபக்சேவை சிறப்பாகவே வரவேற்று பேசினார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பின்போது ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் உடன் இருந்தார்.

காங். தலைவர்களுடனும் சந்திப்பு
தனது டெல்லி பயணத்தின்போது மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் ராஜபக்சே. ஆக, டெல்லியில் உள்ள இரு முக்கியக் கட்சிகளுமே தனக்கு நெருக்கமாக இருப்பதை அவர் மறைமுகமாக இலங்கைக்கு சுட்டிக் காட்டி விட்டார். தான் இன்னும் ஓய்ந்து போகவில்லை என்பதையும் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜபக்சேவின் புதிய முயற்சிகள் எந்த அளவுக்கு அவருக்கும், அவரது கட்சிக்கும் பலன் தரப் போகிறது, ஈழத் தமிழர்களுக்கு இதனால் என்ன மாதிரியான பாதிப்பு அல்லது பலன் ஏற்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications