விலையில்லா சைக்கிளையும் விடாத அரசியல்.. ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பதிலடியாக பாஜக செய்ததை பாருங்க!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் 9 ம்வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளின் கருப்பு நிறத்தை காவி நிறமாக மாற்றம் செய்து ஆளும் பாஜக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காவி என்பது வீரத்தின் அடையாளம், தேசபக்தர்கள் இந்த நிற உடையை அணிந்து தான் போராட்டம் நடத்தினர் என்று கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதல்வராக அசோக் கெலாட் இருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து ராஜஸ்தானில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன்லால் சர்மா உள்ளார். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக சில சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் என்பது கடந்த 2009 முதல் செயல்பட்டு வருகிறது. 2008 முதல் 2013 வரை காங்கிரஸ் சார்பில் அசோக் கெலாட் முதல்வராக இருந்தபோது இந்த திட்டம் கொண் வரப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் ஆண்டுதோறும் 7 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ராஜஸ்தானை பொறுத்தவரை மாணவிகளுக்கு வழங்கும் சைக்கிளின் நிறத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கருப்பு நிறத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தற்போது அந்த சைக்கிளின் நிறம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கருப்புக்கு பதில் காவி(Saffron) நிறத்தில் சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், ‛‛சைக்கிளின் நிறம் மாற்றியதன் பின்னணியில் எந்த காரணமும் இல்லை. முந்தைய பாஜக ஆட்சியில் காவி நிறத்தில் சைக்கிள் வழங்கினோம். அதனை காங்கிரஸ் அரசு கருப்பு நிறமாக மாற்றியது. தற்போது நாங்கள் மீண்டும் காவி நிறத்தில் சைக்கிள் வழங்குகிறோம். இந்த காவி நிறம் என்பது வீரத்தின் அடையாளம். தேசபக்தர்கள் இந்த நிற உடையை அணிந்து தான் போராட்டம் நடத்தினர்'' என்று கூறினார்.
அதாவது இதற்கு முன்பு 2013-2018 காலக்கட்டத்தில் பாஜக ஆட்சியில் வசுந்தராஜே முதல்வராக இருந்தார். அப்போது இலவச சைக்கிள் காவி நிறத்தில் வழங்கப்பட்டது. அதன்பிறகு 2018 ல் ஆட்சி மாறிய பிறகு அசோக் கெலாட் முதல்வரானார். இதையடுத்து காவி நிறம் என்பது கருப்பு நிறமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பாஜக வென்ற நிலையில் மீண்டும் விலையில்லா சைக்கிள் நிறத்தை கருப்பில் இருந்து காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications