70 வருடம் லிவிங் உறவு.. 90 வயது காதல் ஜோடிக்கு திருமணம்.. இப்படியும் ஒரு கிராமமா?
ஜெய்பூர்: இந்தியா நகரங்களில் உள்ள வழக்கம் அனைவரும் அறிந்ததுதான். அதுவே நம் கிராமங்களில் உள்ள வித்தியாசமான கலாசாரம் பற்றி பலருக்கும் தெரியாது. ராஜஸ்தான் பழங்குடி மக்கள் அதிகாரபூர்வ திருமணம் இல்லாமல், லிவிங் ரிலேஷன் வாழும் முறை காலம் காலமாக கடைபிடிக்கிறார்கள். அப்படி 70 வருடங்களுக்கு மேல் லிவிங்கில் இருந்த வயதான காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணமாகியுள்ளது.
காதல் உணர்வும், உறவும் இல்லாத மனிதர்கள் உலகில் இல்லை. எல்லா காதல் உறவுக்கும் ஒரு ஆசை, ஒரு லட்சியம் இருக்கத்தான் செய்யும். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை மறந்துவிடுவது வழக்கம். ராஜஸ்தானில் 70 வருடம் லிவிங்கில் இருந்த 90 வயது மதிக்கத்தக்க காதல் ஜோடியின் ஆசையை அவர்களின் உறவினர்கள் நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்ரி பஞ்சாயத்துக்குட்பட்ட காலந்தர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ராம அங்கரி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜீவ்லி தேவியுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார். லிவிங் ரிலேஷன் என்றவுடன் ஏதோ இளசுகள் என்று நினைத்து விட வேண்டாம். ராம அங்கிரிக்கு வயது 95. ஜீவ்லி தேவிக்கு வயது 90. இருவரும் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக லிவிங்கில் இருந்துள்ளனர்.
ராஜஸ்தான் பழங்குடி மக்களிடம் நடா என்ற கலாசாரம் நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது. இந்த கலாசாரத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் அதிகாரபூர்வ திருமணம் இல்லாமல் ஒன்றாக வாழலாம். சமூகமும் அவர்களை ஏற்றுக் கொள்ளும். இப்படி அதிகாரபூர்வ திருமணம் இல்லாமல் பல வருடங்கள் ஒன்றாக வாழும் முறை அங்கு இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது.
ராம அங்கரி - ஜீவ்லி தேவியும் அப்படித்தான் 70 வருடங்களுக்கு மேல் திருமணம் ஆகாமல் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 4 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூலம் பல பேரன், பேத்திகளும் உள்ளனர். தற்போது பேரன், பேத்திகளுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. என்னதான் சமூகம் அங்கீகரித்தாலும், அதிகாரபூர்வ திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த மக்கள் பலரும் விரும்புகிறார்கள்.
ராம அங்கரி - ஜீவ்லி தேவிக்கும் அதிகாரபூர்வ திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். அவர்களின் ஆசையை வாரிசுகளும், உறவுகளும் நிறைவேற்றியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம அங்கரி - ஜீவ்லி தேவி தம்பதி 70 வருட ரிலேஷன் ஷிப்புக்கு பிறகு அதிகாரபூர்வமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த வயதான தம்பதியின் மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் உற்றவார் உறவினர்கள், நண்பர்க்ள உள்ளிட்ட அனைவரும் ஒன்று கூடி பாரம்பர்ய முறைப்படி திருமணம் நடத்தியுள்ளனர். சம்பிரதாயத்துக்காக என்றில்லாமல் அனைத்து சடங்குகளையும் கடைபிடித்து மிகப்பெரிய கொண்டாட்டமாக இந்த திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.
திருமணத்துக்கு முந்தைய நாள் நடத்தப்படும் பினோலி நிகழ்ச்சி, ஆட்டம், பாட்டம் என்று மொத்த ஊரும் இந்த நிகழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. லிலிங் முறையில் இருந்தாலும், அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு தந்தையின் எல்லா சொத்துகளிலும் பங்கு சென்றுவிடும்.
அதேநேரத்தில் பெண் குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் ஒதுக்கப்படுவதாக புகார் உள்ளது. அதை மாற்றுவதற்காக அதிகாரபூர்வ திருமணம் செய்து, பெண்களின் உரிமைக்கு வலுசேர்ப்பதற்காகவும் இந்த திருமண நிகழ்ச்சியை உள்ளூர் வாசிகள் விழிப்புணர்வாக பயன்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications