ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்- 75% வாக்குப்பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
ராஜஸ்தானில் உள்ள மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74.38% வாக்குகள் பதிவானதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் அதிகபட்சமாக ஹனுமன்கர் தொகுதியில் 68.13% வாக்குகள் பதிவாகியுள்ளது. சிகார் தொகுதியில் 67.25%, பிரதாப்கர், ஜலவார், ராஜ்சமந்த் ஆகிய தொகுதிகளில் முறையே 65.72, 62.72 மற்றும் 61.52% வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்த வாக்குப் பதிவு
சித்தோர்கர் தொகுதியில் குறைந்த அளவாக 25.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 50-க்கும் மேலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்ததாக வந்த புகாரை அடுத்து அவற்றுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூடு
மேலும் ஆல்வார் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ரூப்வாஸ் பகுதியில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற சில சமூக விரோதிகள் முயன்றனர். இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
மாநில முதல்வர் அசோக் கெலாட், ஜோத்பூர் தொகுதியில் மஹாமந்திர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். ஜலவாரில் டோப்கானா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, மகன் துஷ்யந்த் சிங் எம்.பி.யுடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 68.18% வாக்குகளும், 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 66.49% வாக்குகளும் பதிவாகி இருந்தன.












Click it and Unblock the Notifications