உள்ளாட்சித் தேர்தல்: வசுந்தரராஜேவின் கோட்டையில் வெற்றி கொடி ஏற்றிய காங்கிரஸ்- பா.ஜ.க. 'ஷாக்'
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் கோட்டையாகக் கருதப்பட்ட தோல்பூர் மற்றும் ஜலவார் பகுதிகளில் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது பாரதிய ஜனதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லலித் மோடி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில் வசுந்தர ராஜேவுக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் வெல்ல முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். ஆனால் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மிரட்டி கதிகலங்க வைக்கும் வகையில் கணிசமான இடங்களை அள்ளியிருக்கிறது காங்கிரஸ்.
அதுவும் வசுந்தரா ராஜே சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அவரது மகன் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜலவார் மற்றும் தோல்பூரில் காஙகிரஸ் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் பாரதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜவுக்கும் இடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 26 சதவிகிதமாக இருந்த வாக்கு வித்தியாசம் தற்போது 1 சதவிகிதமாக குறைந்திருக்கிறது; காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது என்றார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், லலித் மோடி விவகாரத்தில் கடந்த சில மாதங்களுக்காக காங்கிரஸ் செய்து வந்த பிரச்சாரத்திற்கு மக்கள் உரிய பதிலடி கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வசுந்தரராஜேவுக்கு பெரும் பின்னடைவே!