நாட்டையே உலுக்கிய ரக்பர் கான் கும்பல் படுகொலை.. 4 பசு காவலர்கள் குற்றவாளி! ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு
ஜெய்பூர்: கடந்த 2018 ஆம் ஆண்டு ரக்பர் கான் பசு பாதுகாப்பு கும்பலால் அடுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என்று ஆல்வார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.
வட இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், குஜராத், உத்தராகண்ட், அரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மத வெறி கும்பல்களால் அடித்து கொல்லப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இப்படி ஏராளமானோர் மதம் காரணமாக பலர் வயது வித்தியாசமின்றி கொல்லப்பட்டு உள்ளார்கள்.

இதுபோன்ற கொலைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் அறங்கேறியது. ஆல்வார் மாவட்டம் ராம்கர் பகுதியை அடுத்த லல்வாண்டி பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி இரவு ரக்பர் கான் (வயது 31), அஸ்லம் கான் (வயது 32) ஆகியோர் பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்றனர்.
அரியானா மாநிலம் கோல்காவுன் பகுதியை சேர்ந்த அந்த இருவரும் லால்வாண்டியில் இருந்து தங்கள் சொந்த கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்க முயன்றது.
பசுக்களை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வதாக இருவரும் பல முறை எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளாத அந்த கும்பல் இருவரையும் மணிக்கணக்கில் கொடூரமாக தாக்கியது. இதில் தாக்கப்பட்ட அஸ்லம் கான் என்பவர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், அந்த கும்பலின் பிடியில் சிக்கி கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த ரக்பர் கான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த பசுவின் பேரால் நடத்தப்பட்ட இந்த கும்பல் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா, காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விஜய், நரேஷ், பரம்ஜீத், தர்மேந்திரா, நவால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதில், கைது செய்யப்பட்ட விஜய், நரேஷ், பரம்ஜீத், தர்மேந்திரா ஆகியோர் ரக்பர் கானை கொன்றதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. நவால் என்பவரை மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை கைது செய்து இருப்பதாக கூறி விடுவித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications