போச்சே.. ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்! பாஜகவுக்கு தனிமெஜாரிட்டி.. புது கருத்து கணிப்பு
ஜெய்ப்பூர்: நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாஜக ஆட்சியை பறிக்கும் எனவும், தனி மெஜாரிட்டியுடன் அங்கு ‛தாமரை' மலரும் எனவும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தானுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.
அடுத்த மாதம் இந்தியாவில் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோராம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ராஜஸ்தானை பொறுத்தமட்டில் தற்போது அங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மேலும் ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. மேலிட தலைவர்களுடன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பாஜக தலைவர்களும் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையேயான மோதலை சாதகமாக பயன்படுத்தி சாதிக்கும் முனைப்பில் பாஜகவினர் சூறாவளி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பாக ‛கிரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ்' எனும் அமைப்பு கருத்து கணிப்பு மேற்கொண்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மொத்தம் 80 தொகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி வரும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கருத்து கணிப்புகள் ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என கூறி வரும் நிலையில் இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய கருத்து கணிப்பின்படி 44 சதவீத ஓட்டுக்களுடன் பாஜக 120 தொகுதிகளை வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி 40 சதவீத ஓட்டுக்களுடன் 70 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர மற்றவர்கள் 16 சதவீத ஓட்டுக்கள் பெற்று 10 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருத்து கணிப்பின்படி மேற்படி கட்சிகள் 2 சதவீதம் அதிகமாக ஓட்டுகள் பெற்றால் தற்போதைய கணிப்பை விட 5 தொகுதிகள் கூடுதலாக பெறவும், 2 சதவீத ஓட்டுகளை குறைவாக பெற்றால் 5 தொகுதிகளை இழக்கவும் நேரிடலாம் எனவும் ‛கிரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ்' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications