தேர்தல் முடிவுகள் வந்ததும் இப்படியா! தகிக்கும் ராஜஸ்தான்.. ராஜ்புத் தலைவர் படுகொலை! நிலைமை மோசம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் இயக்கம் ஒன்றை நடத்தி வந்த தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கே கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு செயல்பட்டு வருகிறது. தீவிர வலதுசாரி அமைப்பான இதன் தலைவராக சுக்தேவ் சிங் சோகமெடி இருந்து வந்தார். இவரது வீடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது.

ஏற்கனவே கடந்த சில காலமாகவே இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி அடையாளம் தெரியாத சிலர் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
போராட்டம்: அதாவது நேற்றைய தினம் சுக்தேவ் சிங் சோகமெடி வழக்கம் போல தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரை பார்த்த சிலர் வந்துள்ளனர். அவர்களை சோபாவில் அமர வைத்து சுக்தேவ் சிங் சோகமெடி பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அவர்கள் சுக்தேவ் சிங் சோகமெடியை சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். மேலும், அதைத் தடுக்க முயன்ற போலீசாரையும் சுட்டுள்ளனர்.
இதில் சுக்தேவ் சிங் சோகமெடி படுகாயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் போதே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தடுக்க முயன்ற இருவரும் காயமடைந்தனர். வலதுசாரி அமைப்பின் தலைவர் ஒருவர் பட்ட பகலில் வீடு புகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பகீர் கிளப்புவதாக உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்: இந்த கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் இன்று ராஜஸ்தான் பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடைய ரோஹித் கோதாரா என்ற கும்பல் இந்த கொலைக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்தக் கொலை அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலம் முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறையும் கூட ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாலைகளை மறித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வன்முறை போராட்டம்: ஜெய்ப்பூர் மட்டுமின்றி, சுரு, உதய்பூர், அல்வார் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ள சூழலில் நிலைமை கையைவிட்டுச் செல்லாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அங்கே குவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மறைந்திருக்கும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறோம் என்றும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்பதால் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோகேந்திர சிங் கல்வி என்பவர் நடத்தி வந்த ராஜ்புத் கர்னி சேனாவிலிருந்து பிரிந்து கடந்த 2015ஆம் ஆண்டு கோகமேடி ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனாவை உருவாக்கினார். இந்த இரண்டு அமைப்புமே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பத்மாவத்' திரைப்படம் ராஜபுத்திர சமூகத்தைப் பற்றிய வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறியதாகப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications