ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக மீண்டும் கலகக் குரல்- யாத்திரை போகும் சச்சின் பைலட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் மீண்டும் குடைச்சல் கொடுக்க தொடங்கிவிட்டார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட்டுக்கும் அம்மாநிலத்தின் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்டகால மோதல் தொடருகிறது. சச்சின் பைலட் தமது துணை முதல்வர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக அசோக் கெலாட்டை எதிர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வைத்து அசோக் கெலாட்டை மிரட்டிப் பார்த்தார் பைலட். ஆனாலும் டெல்லி தலையீட்டால் கெலாட் தப்பித்துக் கொண்டார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தேர்தலின் போதும் கெலாட்- சச்சின் பைலட் மோதல் உக்கிரமடைந்து இருந்தது. அப்போதும் கெலாட் கை ஓங்கியது. ஆனால் அண்மை காலமாக கெலாட்டை அவ்வளவு எளிதாகவிடப் போவது இல்லை என வரிந்து கட்டுகிறார் சச்சின் பைலட். அதே நேரத்தில் தாமும் சளைக்கப் போவது இல்லை என களத்தில் நிற்கிறார் கெலாட்.
அசோக் கெலாட், முந்தைய பாஜக ஆட்சி மீதான ஊழல் புகார்களை விசாரித்தே ஆக வேண்டும் என போர்க்கொடி தூக்குகிறார்; கெலாட்டோ, முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாதான் தமது அரசாங்கத்தை காப்பாற்றினார் என்கிறார். இப்போது இந்த பிரச்சனை பேசுபொருளாகிவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சச்சின் பைலட், கெலாட்டுக்கு தலைவர் சோனியா அல்ல; வசுந்தரராஜே சிந்தியாதான் என சாடி உள்ளார். அத்துடன் கெலாட் தலைமையிலான அரசு ஊழலுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க கோரி பாதயாத்திரை செல்லப் போவதாகவும் அறிவித்துளார் பைலட். கோடை வெயிலைவிட ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி அனல்தான் உக்கிரமமாக இருக்கிறது!












Click it and Unblock the Notifications