மொகரம் ஊர்வலத்தில் யானை ரஜினிக்கு காலில் காயம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மொகரம் ஊர்வலத்தின்போது யானை ரஜினி காயம் அடைந்தது.
ஹைதராபாத் நகரில் மொகரம் பண்டிகை அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. மொகரம் பண்டிகையையொட்டி நகரில் முஸ்லீம்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் நேரு விலங்கியல் பூங்காவைச் சேர்ந்த யானை ரஜினியை பாகன் ஓட்டிச் சென்றார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களைத் தாங்களே அடித்து காயப்படுத்திக் கொண்டதுடன், புனித குர்ஆன் வசனங்களை சப்தமாக கூறினர். இதை பார்த்து யானை ரஜினி மிரண்டது. தனக்கு தான் ஏதோ ஆபத்து என்று நினைத்து அங்கிருந்து செல்ல முயல்கையில் சங்கிலி கிழித்து அதன் கால்களில் காயம் ஏற்பட்டது.
இதை கவனித்த பாகன் யானையை கட்டுப்படுத்திவிட்டார். இல்லை என்றால் அது தனக்கு முன்னால் சென்றவர்களை மிதித்துக் கொன்றிருக்கும் என்று கால்நடை அதிகாரி ஹக்கீம் தெரிவித்தார்.
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை போதிய அளவு நேரத்தை பெண் யானை ரஜினியுடன் செலவிட்டனர். காயத்திற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட ரஜினியின் போக்கை கண்காணித்த அவர்கள் அதற்கு அவ்வப்போது மருந்துகள் அளித்தனர்.
ரஜினி அமைதியாக இருப்பதாகவும், நன்றாக ஓய்வு எடுத்தால் பழையபடி ஆகிவிடும் என்றும் விலங்கியல் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications