ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுவிப்பதில் எந்தவித அரசியலும் இல்லை: தமிழக அரசு வாதம்
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்வதில் எந்தவித அரசியலும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையில், நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
9-வது நாளாக நேற்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தனது வாதங்களை முன்வைத்து கூறியதாவது:
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில் எந்தவித அரசியலும் இல்லை. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு அப்போது எதிர்க்கட்சிகளும் கூட தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்தன.
இதுபோன்ற விவகாரங்களில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றால், மத்திய-மாநில அரசு இடையேயான அதிகாரப் பகிர்வு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரலாம்.
ஆனால் அதை விடுத்து ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பது ஏற்கத் தகுந்தது அல்ல.
கருணை மனுக்கள் எத்தனை முறை சமர்ப்பிக்கப்பட்டாலும் அவற்றின் மீது முடிவெடுக்க ஆளுநர் அல்லது ஜனாதிபதி ஆகியோருக்கு அதிகாரம் இருக்கிறது.
தங்களுக்கு வாழக்கை எப்படியாவது மீண்டும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் தாக்கல் செய்யும் மனுக்களை குறிப்பிட்ட முறைதான் தாக்கல் செய்ய முடியும் என்று சுருக்கி விடவேண்டாம்.
இவ்வாறு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிட்டார்.












Click it and Unblock the Notifications