ராஜிவ் வழக்கில் மூவர் தூக்கை ரத்து செய்ய எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுசீராய்வு மனு!
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த 18ந் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்த தடை உத்தரவைப் பெற்ற உடனேயே மத்திய அரசு சார்பில் மற்றொரு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ததை மத்திய அரசு எதிர்த்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம் வழக்கின் அம்சங்களை கருத்தில் கொள்ள தவறிவிட்டது. தூக்கு தண்டனையை ரத்து செய்ததன் மூலம் நீதிமன்றம் அரசின் அதிகார வரம்பில் தலையிட்டுள்ளது.
5 நபர் கொண்ட அமர்வு அளிக்க வேண்டிய தீர்ப்பை மூன்று நபர் அமர்வு அளித்துள்ளது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.