கெஜ்ரிவால் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்க... போலீசாரிடம் இப்படிச் சொன்னது ராஜ்நாத் சிங்!
டெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
டெல்லி போலீசின் 68வது உதய தின அணிவகுப்பு டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது :-

டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் புதிய கட்சி ஒன்று மக்களின் ஆதரவைப் பெற்று அரசு அமைத்துள்ளது. அந்த அரசுக்கு டெல்லி போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான், டெல்லி நகரம் மேம்பாடு அடையும்.
‘கட்சி பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைப்பு மூலம் உலகில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகும்' என பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அதனால், டெல்லி அரசுக்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்.
டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் - ஒழுங்கை பேணிக்காக்கவும், வளர்ச்சிப் பணிகள் சமூக விரோத சக்திகளால் தடைபடாமல் தடுக்கவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் சமீபத்தில், தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல், டெல்லி போலீஸ் கமிஷனரும் மற்ற அதிகாரிகளும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டெல்லியில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். அதனால், சிறிய விஷயங்கள் கூட தேசிய அளவிலான செய்திகளாகவும், பெரிய சம்பவங்கள் சர்வதேச செய்திகளாகவும் மாறிவிடும். எனவே, டெல்லி போலீசார் தங்களின் கவுரவத்திற்கு பங்கம் வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லியில் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்தான் காவல்துறையை கையில் வைத்துள்ளது. இதை வைத்துத்தான் கடந்த முறை கெஜ்ரிவாலுக்கும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications