ரூபாய் நோட்டு வாபஸ்: அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்
டெல்லி: 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது தொடர்பாக இன்று காலை அனைத்து கட்சி தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பையும் அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளையும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து 12 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றம் எதிரில் உள்ள காந்தி சிலையின் முன் வரிசையாக அணிவகுத்து நின்று நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 200 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் 28-ம் தேதி நாடுதழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 10 மணியளவில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களவை, மாநிலங்களவை அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications