முஸ்லீம் தொப்பி அணிய மறுத்த மோடி.. அணிந்த ராஜ்நாத் சிங்- கருத்து சொல்ல மோடி தரப்பு மறுப்பு
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய மத குருக்களான மௌலான கல்பே சாதிக் , மௌலானா காகில்டு ரஷீத், மௌலானா கல்பே ஜவாத் ஆகியோரை ராஜ்நாத் சிங் சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றினைய வேண்டும் என்று கூறினார்.
முஸ்லீம் மத குருக்களை சந்தித்த ராஜ்நாத்சிங் தலையில் தொப்பி அணிந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் மூலம் ராஜ்நாத்சிங்கின் புகழ் ஒரே நாளில் உயர்ந்து விட்டதாக மௌலான கல்பே ஜவாத் கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் போல அவர் புகழடைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
தொப்பியை மறுத்த மோடி
அதேசமயம் கடந்த 2011ம் ஆண்டு உண்ணாவிரத நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவிக்க வந்த முஸ்லீம் மதத்தை சேர்ந்த நபர் வழங்கிய தொப்பியை மோடி அணிய மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.
ஏன் தொப்பி அணியவில்லை
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மோடி, சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் தலைவர்கள் தலைத் தொப்பியை அளித்த போது அதனை வாங்கி நான் அணிந்து கொண்டிருந்தால் அது, ஒற்றுமையின் சின்னமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அப்படி அதனை அணிந்து கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை.
ஒற்றுமைக்காக பாடுபட்ட மகாத்மாவோ, சர்தார் பட்டேலோ, நேருவோ அந்த தொப்பியை அணிந்துதான் அவர்களது சமத்துவத்தைக் காட்டினார்களா, இல்லையே. நான் எனது மதத்தை பின்பற்றி வாழ்கிறேன். மற்ற மதங்களையும் மதிக்கிறேன் என்று கூறினார்
பிரகாசமான வெற்றி
இந் நிலையில் இப்போது உத்தரபிரதேச மாநிலம் லக்னௌ தொகுதியில் ராஜ்நாத்சிங் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம். 1.5 லட்சம் ஷியா பிரிவு முஸ்லீம்கள் லக்னௌவில் வசிக்கின்றனர். இந் நிலையில் தான் மௌலான ஜவாத்தை ராஜ்நாத் சந்தித்தார்.
அப்போது தான் முஸ்லீம் தொப்பியையும் அணிந்தார். இதையடுத்து நரேந்திர மோடியை விட ராஜ்நாத்சிங்தான் வாஜ்பாய் போல அனைத்து மதத்தினராலும் விரும்பத்தக்க தலைவர் என்று கூறினார் மௌலான ஜவாத்.
ஆனால், முஸ்லீம் தொப்பி அணிந்து மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை என்று மோடி கூறியுள்ள நிலையில், அதே தொப்பியை ராஜ்நாத் சிங் அணிந்தது குறித்து மோடி தரப்பிடம் பல மீடியாக்களும் கேள்வி எழுப்பினாலும், அதற்கு பதிலளிக்க மறுத்து வருகிறது மோடி தரப்பு.