மகள்களை காப்பாற்றுவது எப்படி என மோடியிடம் கற்றுக் கொள்ளுங்கள்.. ஷெரீப்புக்கு ராக்கி அட்வைஸ்!
மும்பை: பாகிஸ்தானில் குவான்டீல் பலூச் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனை தருகிறது. பெண்களை எப்படிக் காப்பாற்றுவது என்று பாகிஸ்தான் பிரதமருக்குத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் மோடி தனது நாட்டுப் பெண்களை, குறிப்பாக மகள்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை அவரிடமிருந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
குவான்டீல் பலூச்சின் கொடூரக் கொலை உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராக்கி சாவந்த்தும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராக்கி சாவந்த் அளித்துள்ள பேட்டியிலிருந்து...
மோடியை நினைத்து பெருமை
மோடி நமது பிரதமராக இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். பெண்களைக் காப்பாற்றுவது என்பதை தனது சொந்த மகள்களைக் காப்பது போல அவர் கொள்கையாக வைத்துள்ளார். சொல்லில் மட்டுமல்லாமல் செயலிலும் அவர் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறார்.
பெண்களுக்காக எத்தனை சட்டங்கள்
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல சட்டத் திருத்தங்களை அவர் கொண்டு வந்துள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கும், அவர்களை சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுவதிலும் திறம்பட செயல்படுகிறார்.
பலூச் மரணம் வருத்தம் தருகிறது
பலூச் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களை சமூக வலைதளங்களில் போட்டதால் கொல்லப்பட்டரா அல்லது இந்தியப் பிரபலங்கள் பலரை நேசித்து வந்ததால் கொல்லப்பட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது மரணம் வருத்தம் அளிக்கிறது.
விராத் கோஹ்லியின் விசிறி
விராத் கோஹ்லி, ஷாருக் கான், கரீனா கைப் ஆகியோரின் ரசிகையாக இருந்தார் பலூச். ஏன் என்னையும் கூட அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தியர்களைப் பிடித்ததால் அவரை அவரது சகோதரர் கொன்று விட்டாரா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
உறவு வைத்துக் கொள்ளக் கூடாதா?
பாகிஸ்தான் மத குரு ஒருவருடன் அவர் நெருக்கமான உறவில் இருந்ததால் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியே இருந்தாலும், பாகிஸ்தானில் ஒரு பெண் தான் விரும்பியவருடன் உறவு கொள்ளக் கூட உரிமை இல்லையா? அவர்களுக்கென்று சுய கொள்கை இருக்கக் கூடாதா?
கற்றுக் கொள்ளுங்கள் ஷெரீப்
இந்த விஷயத்தில் மோடியைப் பார்த்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கற்றுக் கொள்ள வேண்டும். தன் நாட்டு மகள்களைக் காக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு. அதை அவர் மறந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் ராக்கி சாவந்த்.