ஜெயலலிதா ஜாமீன் மனுவுக்காக லண்டனில் இருந்து பெங்களூர் பறந்து வந்த ராம் ஜெத்மலானி!
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீது வாதாட லண்டனில் இருந்து நேரடியாக பெங்களூர் வந்துள்ளார் ராம் ஜெத்மலானி.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர அதிமுகவினர் முனைப்பாக உள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அவர் மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார்.

இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் ஆஜராக இந்தியாவின் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத் மலானி நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்த ராம் ஜெத்மலானிக்கு, வழக்கு விபரங்களை அதிமுக வழக்கறிஞர் குழு இ-மெயில் மூலம் அனுப்பி வைத்திருந்தது. இதை படித்து பார்த்த ராம் ஜெத்மலானி, லண்டனில் இருந்து இன்று காலை பெங்களூர் வந்தார்.
காலை 10.45 மணிக்கெல்லாம் அவர் கர்நாடக ஹைகோர்ட்டிற்கு காரில் வந்தார். அவரை பார்க்கவே இளம் வக்கீல்கள் கூட்டம் கோர்ட் வளாகத்தில் அலைமோதியது. ஆயினும், அரசு வழக்கறிஞர் குறித்த குழப்பத்தால், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு தள்ளிப்போயுள்ளது.












Click it and Unblock the Notifications