25ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்
டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25ஆம் தேதி காலை பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றனர்.
இதனால் ராம்நாத் கோவிந்த் 65.65% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமார் 34.35% வாக்குகளைப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள ராம்நாத் கோவிந்த் ஜூலை 25ஆம் தேதி காலை பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்துக்கு இடைக்கால அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது .ராம்நாத் கோவிந்துக்கான பாதுகாப்புப் பணியை குடியரசு தலைவரின் பாதுகாவலர்கள் ஏற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications