ராமநவமி துயரம்: ம.பி. கோவில் கிணறு தடுப்பு இடிந்து விழுந்து 13 பேர் பலி- ஆட்சியர் இளையராஜா தகவல்
இந்தூர்: ராமநவமி நாளில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில் கிணறு தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் இன்று ராமநவமி கொண்டாட்டங்கள் களைகட்டின. இதன் ஒரு பகுதியாக கோவில்களில் கூட்டம் அலை மோதியது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில் ஒன்றில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினர். அப்போது கோவில் கிணறின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்தூர் மாவட்ட ஆட்சியர் இளையராஜா ஐ.ஏ.எஸ். தலைமையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிணற்றுக்குள் தவறி விழுந்தவர்கள் பலர் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.
இந்தூரில் சம்பவம் நடைபெற்ற கோவில் பகுதியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகின்றனர். முதலமைச்சர் அலுவலகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டு வருகிறது. ராமநவமி நாளில் கோவில் விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
“அற்புதம்”.. 2024 ராமநவமி! அயோத்தி ராமர் கோயில் சிலை தலையில் சூரிய கதிர்கள் விழும்! சிபிஐஆர் தகவல்