லாலு மீதான மாட்டுத் தீவன ஊழல் 4வது வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு!
மாட்டுத்தீவன ஊழல் 4வது வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு அளிக்கிறது.
ராஞ்சி : மாட்டுத் தீவன ஊழல் 4வது வழக்கில் பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கான இறுதித் தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே 3 வழக்குகளில் 13.5ஆண்டு சிறைத்தண்டனை பெற்று சிறையில் உள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
இந்தியாவையே உலுக்கிய பீஹாரில் நடந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீது 6 வழக்குகள் போடப்பட்டன. இந்த ஊழல் தொடர்பான 4வது வழக்கில் லாலுபிரசாத் தவிர மற்றொரு பீஹார் முன்னாள் முதல்வரான ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு உள்ளது.
டிசம்பர் 1995 முதல் ஜனவரி 1996 வரையிலான காலகட்டத்தில் தும்கா ட்ரெஷரியில் இருந்து மோசடியாக ரூ. 3.13 கோடி பணத்தை எடுத்ததற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது. மாட்டுத் தீவன ஊழல் வழக்கு லாலு பிரசாத் யாதவின் அரசியல் வாழ்வில் சறுக்கலை ஏற்படுத்தியது. இது வரை 3 வழக்குகளில் லாலுவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் எதிரொலியாக லாலு 1997ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நேரிட்டது, இதே போன்று எம்பி பதவியும் இழந்து தேர்தலில் 6 ஆண்டுகள் போட்டியிட தடையும் ஏற்பட்டது.

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு
மொத்தமுள்ள 6 வழக்குகளில் 3 வழக்குகளில் லாலுவிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு முதன்முதலில் லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

3வது வழக்கு என்ன?
மாட்டுத் தீவன ஊழல் 3வது வழக்கில் ஜனவரி 24ல், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் லாலுவிற்கு விதிக்கப்ப்டடது. 1992-1993 காலகட்டத்தில் சாய்பாஷா ட்ரெஷரியில் இருந்து மோசடியாக ரூ. 33.67 கோடி பணத்தை எடுத்ததற்காக லாலுபிரசாத் உள்ளிட்ட 50 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரசாத் ஜெகந்நாத் மிஸ்ரா குற்றவாளி என்று அறிவித்ததோடு அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.

மொத்தம் 13.5 ஆண்டு தண்டனை
கடந்த டிசம்பர் 23,2017 முதல் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாட்டுத் தீவன ஊழல் 2வது வழக்கில் 3.5 ஆண்டுகள் தண்டனை பெற்றதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு 13.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லாலுவின் இறுதிக் காலம் சிறையில் தானா
மாட்டுத் தீவன ஊழல் 4வது வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வெளியாக இருந்தது. இந்த வழக்கில் கடந்த 5-ம் தேதி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்க இருந்த தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவிற்கு தற்போது 69 வயதாகிறது, ஏற்கனவே 13.5 ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்குமோ தெரியவில்லை. ஆக மாட்டுத் தீவன ஊழல் வழக்கு தீர்ப்புகளால் லாலுவின் எஞ்சிய காலம் சிறையில் கழிக்க நேரிடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications