பதான் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை: சிபிஐ
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சி.பி.ஐ. தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் காணாமல் போன 14 வயது மற்றும் 16 வயது சகோதரிகள் அப்பகுதியில் உள்ள மாமரத்தில் பிணமாக தொங்கினர். அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த சிறுமிகளை கண்டுபிடிக்க போலீசார் உதவி செய்யவில்லை என்றும் குற்றவாளிகள் உயர்சாதியினர் என்பதால் அவர்களை பாதுகாப்பதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

பலாத்காரமே- உள்ளூர் மருத்துவர்
சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த உள்ளூர் மருத்துவர் தமது அறிக்கையில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் உயிருடன் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

கவுரவக் கொலை?
இது கவுரவக் கொலையாக இருக்கலாம் என்று உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

சிபிஐ விசாரணை
ஒரு மாதத்திற்குப் பின் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 2 மாத காலம் விசாரணை நடத்திய சி.பி.ஐ., இந்த வழக்கில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை
குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் சமீபத்தில் சி.பி.ஐ. உண்மை கண்டறியும் சோதனை நடத்தியது. இதில், அவர்கள் குற்றமற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதேபோல், சிறுமிகளின் பெற்றோரிடம் நடத்திய சோதனையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை தெரிவித்தனர்.

ஜாமீனுக்கு எதிர்ப்பு இல்லை
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று சி.பி.ஐ. கூறுகிறது.

வேறு கோணத்தில் விசாரணை
அதேசமயம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்களா என்பதை முதலில் உறுதி செய்து, அதன்பின்னர் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications