ராம ராஜ்யத்திலேயே பலாத்காரம் நடந்துள்ளதே... உ.பி போலீஸ் டிஜிபியின் சர்ச்சை பேச்சு
லக்னௌ: நாட்டில் ராமராஜ்யமே நடந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களையோ, பாலியல் பலாத்காரங்களையோ தடுக்க முடியாது. ராம ராஜ்ஜியத்திலேயே கூட பலாத்காரச் செயல்கள் நடந்துள்ளன என்று உத்தரபிரதேச மாநில காவல்துறை டிஜிபி ஜக்மோகன் யாதவ் கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பாலியல் பலாத்காரங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக சமாஜ் வாடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மாநிலத்தின் போலீஸ் டிஜிபி ஜக்மோகன் யாதவிடம் செய்தியாளர் ஒருவர், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நாட்டில் பல மாநிலங்களில் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். இது இங்கு மட்டும் நடக்கவில்லை. பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் காவல்துறையினரால் தடுக்க முடியாது என்றார். ஜக்மோகன் யாதவ் இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறப்போகிறார். இந்த நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினைக் கூறி எதிர்கட்சியினரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
பலாத்காரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி மாட்டிக்கொள்வது என்பது உத்தர பிரதேச மாநிலத்தில் புதிய விசயமில்லை. கடந்த ஆண்டு சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் இதேபோன்று ஒரு கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கினார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 21 கோடி. எனவே மாநிலத்தில் ஒவ்வொரு குற்றத்தையும் கண்காணிக்க முடியாது. குற்றங்கள் நடைபெறும் பகுதியில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறி கடும் கண்டனத்திற்கு ஆளானார். அதேபோல இப்போது மாநில காவல்துறை டிஜிபியும் கூறியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications