லாலு பிரசாத்துக்கு எதிராக சிபிஐ துணையுடன் பாஜக சதி.. ராஷ்ட்ரீய ஜனதா தளம் புகார்
லாலு பிரசாத்துக்கு எதிராக சிபிஐ துணையுடன் பாஜக சதி செய்துவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
ராஞ்சி : மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் புகார் கூறியுள்ளது.
1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் ரூ. 950 கோடி அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி ரசீதுகளை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது ஒரு வழக்கு பதிவானது.
இந்த வழக்கில் மாஜி முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடன், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட மேலும் 44
பேர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் 21 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.
இதில் லாலு பிரசாத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுவிட்டார். குற்றவாளிகளுக்கு ஜனவரி 3-ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று ராஞ்சி நீதிமன்றம் அறிவித்தது. இதுகுறித்து லாலு பிரசாத்தின் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறுகையில், மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பில் குறைபாடுகள் உள்ளன.
லாலு பிரசாத்திற்கு எதிராக சிபிஐ துணையுடன் பாஜக சதி என்று தெரிவித்துள்ளனர்.