டாடா வரலாற்றில் அதிக ஊழல் செய்தவர் ரத்தன் டாடா தான்.. சொல்கிறார் சு.சுவாமி
ரத்தன் டாடா மிகப்பெரிய ஊழல் செய்தவர் என பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ராய்பூர்: டாடா நிறுவன வரலாற்றில் அதிக ஊழல் செய்தவர் ரத்தன் டாடா தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராய்பூரில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: டாடா நிறுவன வரலாற்றில் அதிக ஊழல் கறை படிந்தவர் ரத்தன் டாடா தான். அவர் டாடா குடும்ப வாரிசே கிடையாது. தத்து பிள்ளை தான். சைரஸ் மிஸ்ட்ரிக்கு ரத்தன் டாடா அநீதி இழைக்கிறார்.
சைரஸ் மிஸ்ட்ரி சிறப்பாக செயல்பட்டதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டாடா நிர்வாக குழு பாராட்டு தெரிவித்தது. இதனால் பொறாமை அடைந்த ரத்தன் டாடா உடனடியாக இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். ரத்தன் டாடாவுக்கு 2 ஜி, ஏர் ஏசியா உள்பட பல ஊழல் வழக்குகளில் தொடர்புள்ளது. இதில் இருந்து தப்பிக்கதான் தற்போது இந்த பதவியை பிடித்துள்ளார்.
எனவே, அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். மேலும் ரத்தன் டாடா எந்தெந்த பிரிவுகளில் சட்டங்களை மீறியுள்ளார் என்ற விவரங்கள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.