விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரிலீஸ்... இன்று முதல் மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டு!
மும்பை: இன்று முதல் நாடு முழுவதும் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 50, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. இதன் ஒரு பகுதியாக புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது.
இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
முதன் முறையாக வெளியிடப்பட உள்ள 200 ரூபாய் நோட்டு பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்துடன் வெளியாக இருக்கும் இந்த நோட்டின் முன்பக்கத்தில் நடுவே மகாத்மா காந்தி படம் இடம் பெற்று உள்ளது. இடது புறத்தில் 200 என்ற எண் தேவநாகரி எழுத்தில் இருக்கிறது.
வலது புறத்தில் அசோக சின்னமும், 'எச்' என்ற எழுத்தும், 200 என்ற எண் பச்சை மற்றும் நீல நிறத்தில் மாறும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
நோட்டின் பின்பக்கத்தில் சாஞ்சி ஸ்தூபி படம் உள்ளது. மேலும் தூய்மை இந்தியா இலச்சினை மற்றும் வாசகமும், தமிழ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 200 ரூபாய் என்ற எழுத்தும் இடம் பெற்றுள்ளன.
RBI to issue Rs 200 notes: All you need to know#infographics pic.twitter.com/h34gDZgITY
— Oneindia Tamil (@thatsTamil) August 25, 2017
நேற்றுதான் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எப்போது...?
இந்தியா முழுவதும் இந்த புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தாலும், தமிழகத்தில் எப்போது மக்கள் கைகளுக்கு இந்த புதிய நோட்டுகள் கிடைக்கும் என்பதில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.












Click it and Unblock the Notifications