தடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க தேவை என்ன?: ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழியும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது:
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க இந்த அறிவிப்பு உதவும். இதன் மூலம் மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு குறைபாடு இல்லை. போதிய எண்ணிக்கையில் புதிய ரூபாய் நோட்டுகள் தயாராக இருப்பதாகவும். புதிய நோட்டுக்கள் அனைத்தும் 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பொருளாதார விவகார துறை செயலர் சக்திகந்தா தாஸ் கூறுகையில், மத்திய அரசு எடுத்துள்ள துணிச்சலான முடிவு இது, இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டு உபயோகம் பயங்கரவாதிகள் கையில் பணப்புழக்கம் அதிகரித்ததை தவிர்க்க முடியும். 2006 முதல் 2011 வரை 500 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் 76 சதவீதம் அதிரித்த்துள்ளது. அதேபோல் 1000 ரூபாய் கள்ளநோட்டின் புழக்கம் 109 சதவீதம் அதிரித்ததாக கூறப்படுகிறது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வரும் 10 ம் தேதி முதல் புழக்கத்தில் விடபடும் என்று கூறியுள்ளார்.