வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரகுராம் ராஜன் தகவல்
மும்பை: ரிசர்வ் வங்கி, வட்டி வகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் (ரெப்போ) மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடன் கொள்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில் நடப்பு பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது, மேலும் வளர்ச்சி பெற நல்ல சூழல் நிலவுகிறது . வங்கி கடன் விகிதத்தில் மாற்றமில்லை என்றார்.
மேலும் அவர் கூறியது: ரெப்போ வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஏற்கனவே இருக்கும் 6.75 சதவீதமே தொடரும். இதேப்போன்று சிஆர்ஆர் ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதத்திலேயே தொடரும். 2017ம் ஆண்டுக்குள் பணவீக்கம் 5 சதவீதத்திற்குள் இருக்கும்.
நடப்பு நிதியாண்டு 2016-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும், 2017-ல் 7.6 சதவீதமாக உயரும். நடப்பு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொறுத்து வரும்காலத்தில் வட்டி வகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிவித்தார்.இதனால் வீட்டு கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.