உடம்பைக் குறைக்கணும், முடி வளர்க்கணும்... ஆஸ்பிடலுக்குப் படையெடுக்கும் மணமக்கள்
பெங்களூர்: முன்பெல்லாம் திருமணத்திற்கு தயாராவதென்றால் பத்திரிக்கை அடிப்பது, மண்டபம் பார்ப்பது, சமையல்காரரைத் தேர்ந்தெடுப்பது போன்ற முன்னேற்பாடு வேலைகள் தான் இருந்தன. ஆனால், தற்போது அந்த லிஸ்டில் மருத்துவமனைகளும் சேர்ந்து விட்டன.
கல்யாணம் ஆகி பிரசவத்திற்குத் தானே மருத்துவமனைத் தேட வேண்டும்? கல்யாணத்திற்கு எதற்கு எனக் குழம்புகிறீகளா...?
திருமணம் என்பது வாழ்வில் நடைபெறும் மிகவும் இனிய நிகழ்வு. எனவே, அத்தருணத்தில் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் தோன்ற விரும்பும் மணமக்கள், முன்பெல்லாம் பியூட்டிபார்லரை நோக்கி மட்டும் தான் படையெடுத்து வந்தன. தற்போது அந்த லிஸ்டில் மருத்துவமனையும் சேர்ந்து விட்டன. இதோ சில உதாரணங்கள்....

தலையாயப் பிரச்சினை....
தனது காதலிக்காகவும், வருங்கால மாமனாருக்காகவும் தலையில் முடி வளர்த்த பெருமைக்குரியவர் தான் பெங்களூரைச் சேர்ந்த 29 வயது ‘வழுக்கை'காதலர் ஒருவர்.

தலைமுடி பிரச்சினை...
திருமணத்திற்காக, செயற்கையாக முடியை தலையில் நட்டு வழுக்கையை மறைக்கும் நவீன சிகிச்சை மேற்கொண்டுள்ளார் இவர். தலையில் முடி இல்லாவிட்டால், காதலி வீட்டில் தான் நிராகரிக்கப் படலாம் என பயந்தே இந்த மருத்துவத்தை மேற்கொண்டதாக கூறுகிறார் அவர்.

எடைகுறைப்பு...
அதேபோல், மற்றொரு மணப்பெண் திருமண நாளன்று அழகான தோற்றத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தனது எடையை அறுவைச் சிகிச்சை மூலம் 8கி வரைக் குறைத்துள்ளாராம்.

மருத்துவர்கள் கருத்து...
சமீபகாலமாக திருமண நாள் எனும் அந்த இனிய நாளுக்காக, மருத்துவமனைகளைத் தேடி வரும் மணமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் பெங்களூர் மருத்துவர்கள்.

குறிப்பிட்ட சிகிச்சைகள்....
குறிப்பாக, மார்பக பெருக்கம், உதடு வடிவத்தை மாற்றி அமைத்தல், இரட்டை கன்னம் திருத்தம், உடல் எடையைக் குறைத்தல், கனன்க்குழி உருவாக்கம் மற்றும் முடி மாற்று சிகிச்சை போன்றவற்றிற்காக மருத்துவமனை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

சிகிச்சைக் கட்டணம்....
சிக்ஸ்பேக் அழகனாக மாறுவதற்கு பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து முப்பதாயிரம் ரூபாயும், உதட்டை அழகு படுத்த பத்தாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் ரூபாயும், முடி மாற்று சிகிச்சைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாயும் என விலைப்பட்டியல் நீள்கிறது.

விசாரணை அழைப்புகள்....
திருமண சீசனில், இது குறித்து விசாரணை அழைப்புகள் மட்டும் நாளொன்றிற்கு சுமார் 400 போன்கால்கள் வருகின்றதாம் மருத்துவமனைக்கு.












Click it and Unblock the Notifications