"கக்கூஸ் இல்லாத வீடு எனக்கு வேண்டாம், நான் அம்மா வீட்டுக்கே போறேன் மாமா..."
லக்னோ: உ.பியில், திருமணம் செய்து கணவர் வீட்டுக்கு வந்த 6 பெண்கள், அங்கு கழிப்பறை வசதி இல்லாததால் அதிருப்தி அடைந்து கணவர் வீட்டைத் துறந்து தாய் வீட்டுக்கே திரும்பி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களின் இந்தப் புரட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லியில், சுதந்திர தினத்தையொட்டி ஆற்றிய உரைதான் காரணம். தனது உரையின்போது வீடுகளில் கழிப்பறையின் அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தார் மோடி என்பது நினைவிருக்கலாம்.
இந்த ஆறு பெண்களுமே உ.பி. மாநிலத்தின் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

திருமணமான சில நாட்களிலேயே
இவர்கள் அனைவரும் திருமணமான ஓரிரு வாரங்களிலேயே தாய் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கக்கூஸ் கட்டினால்தான் வருவோம்
தங்களது மாமியார் வீடுகளில் கழிப்பறை இருக்க வேண்டும். அந்த வசதி இருந்தால்தான் திரும்பவும் அங்கு போவோம். இல்லாவிட்டால் போக மாட்டோம் என்றும் உறுதியாக சொல்லி விட்டனர் இந்தப் பெண்கள்.

கை கொடுக்க முன்வந்த சுலப்
இந்த செய்தியை அறிந்து தற்போது சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிந்தேஸ்வர் பதக் தலையிட்டுள்ளார். தனது அமைப்பின் மூலம் இந்த ஆறு பெண்களின் மாமியார் வீடுகளிலும் கழிப்பறை கட்டித் தருவோம் என்று அவர் அறிவித்துள்ளார்.

பாராட்டுக்கள் குவிகிறது
இந்த ஆறு பெண்களின் உறுதியையும், முடிவையும் பதக் பாராட்டியுள்ளார். இது அசாதாரணமானது, ஆனால் நியாயமானது என்று அவர் கூறியுள்ளார். அதேபோல இப்பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தும், பாராட்டியும் வருகின்றனர்.
சபாஷ்...!












Click it and Unblock the Notifications