மீண்டும் தலைதூக்கும் 'ஆக்சிடோசின்' அரக்கன்: விபச்சாரத்தில் தள்ளப்படும் சிறுமிகள்
ஸ்ரீநகர்: இந்தியாவில் இளம் சிறுமிகளுக்கு ஆக்சிடோசின் ஊசி போட்டு விரைவாக பருவமடையச் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் கொடுமை வேகமாகப் பரவி வருகின்றது. மேலும், பல்வேறு தவறான வழிகளுக்கு அந்த ஊசியானது பயன்பட்டு வருகின்றது.
உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசி இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத மருந்து கடை ஒன்றில் பெருமளவிலான ஆக்சிடோசின் கைப்பற்றப்பட்டதன் மூலம், இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் குழந்தை பெறவும் இந்த ஊசி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த ஊசி விற்கப்படுவதை விழிப்புடன் கண்காணித்து தடுக்கவேண்டும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் இந்த ஊசியை செலுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவை அதிகரிக்க செய்துள்ளதாகவும் சி.டி.எஸ்.சி.ஓ தெரிவித்துள்ளது. மாட்டுப்பண்ணை வைத்துள்ளவர்கள் அதிகமாக பால் கறப்பதற்காக பசுமாட்டிற்கும் இந்த ஊசியை போடுவதாகவும் தெரிகிறது.
இதனால் விரைவில் பசுவும் உயிரிழந்து அதன் உரிமையாளரும் பொருளாதார ரீதியாக நஷ்டமடைய நேரிடுகிறது என மருந்து தர கட்டுப்பாட்டு துறை தலைவர் ஜி.என்.சிங் கூறியுள்ளார்.
தென் இந்தியாவில் தர கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில், 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டது தெரிவித்துள்ளது.
சிகப்பு விளக்கு பகுதிகளான ராஜஸ்தானில் உள்ள சோடாவாஸ் மற்றும் கிர்வாஸ் கிராமங்களில் 10 வயதே நிரம்பிய குழந்தைகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இனியும் இது போன்ற அத்துமீறல்கள் நிகழாமல், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்து தடுப்பு துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று சி.டி.எஸ்.சி.ஓ எச்சரிக்கை விடுத்துள்ளது.