காங். நாடாளுமன்ற குழுக் கூட்டம்.. ஒருத்தர் கூட வரலை.. கடும் கோபத்தில் வெளியேறிய சோனியா!!
டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்துக்கு உரிய நேரத்தில் ஒருவரும் வராததால் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கடும் கோபமடைந்து அக்கூட்டத்தையே ரத்து செய்தார்.
டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் கூட்ட நேரம் 10 மணிக்கு மாற்றப்பட்டு அதுவும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அவர் வந்த போது கூட்டத்தில் பங்கேற்க ஒருவர் கூட வரவில்லை.
இதனால் சோனியாகாந்தி கடுமையாக கோபமடைந்தார். சிறிது நேரம் தனியாக அங்கிருந்த அவர் கடுமையான கோபத்துடன் பாதியிலேயே வெளியேறி விட்டார். பின்னர் நேற்று நடைபெற இருந்த கூட்டத்தையே சோனியா ரத்தும் செய்துவிட்டார்.