செம்மரக் கடத்தல் கும்பல் தலைவன் கங்கி ரெட்டி மொரீஷியஸில் கைது- இந்தியாவுக்கு நாடு கடத்தல்!
ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் கும்பல் தலைவன் கங்கி ரெட்டி மொரீஷியஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளான். அவனிடம் ஆந்திரா போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில டி.ஜி.பி. ராமுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடப்பா மாவட்டம் மல்லம் மலடி கிராமத்தை சேர்ந்த கொல்லம் கங்கிரெட்டி பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.

2003-ம் ஆண்டு திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் காணிக்கை கொண்டு செல்லும்போது அவரது கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. இந்த வழக்கில் கங்கி ரெட்டி முக்கிய எதிரி.
அப்போது அவரை போலீஸார் கைது செய்து திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் வெளியே வந்த அவர் போலி பாஸ் போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.
மொரீஷியஸ் நாட்டில் கங்கிரெட்டி தனது காதலியுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய உள்துறையுடன் ஆலோசித்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டோம்.

பின்னர் ஆந்திரா தனிப்படை போலீஸார் மொரீஷியஸ் சென்றனர். அங்கு சர்வதேச போலீஸார் கங்கிரெட்டியை கைது செய்து ஆந்திர போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மொரீஷியஸில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று அவர் டெல்லி அழைத்து வரப்பட்டார். பின்னர் டெல்லியில் இருந்து ஹைதராபாத் கொண்டு வரப்பட்டார்.
கடப்பா, திருப்பதி, சித்தூர், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் அவர் மீது போலீஸ் மற்றும் வனத்துறை தொடர்பான 28 வழக்குகள் உள்ளன. அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
இவ்வாறு டி.ஜி.பி. ராமுடு கூறினார்.












Click it and Unblock the Notifications