பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது ஏற்புடையது அல்ல: ஜெ. அரசு மனு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு அந்த 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று தெரிவித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கு போன்ற வழக்குகளில் மாநில அரசு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையை பெற்றால் போதுமானது. அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் 7 அம்சங்களில் ஒரு அம்சத்தில் கூறியுள்ளபடி, ''ஆலோசனை பெறுதல்'' என்பதற்கு ''ஒப்புதல் பெறுதல்'' என்று பொருள்படுவதாக குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. இது மாநில அரசுக்கு சட்டம் அளித்துள்ள தனிப்பட்ட அதிகாரங்களை கேள்விக்கு உள்ளாக்கும் செயலாகும்.
இந்த தீர்ப்பு, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசுக்கு பரவலாக்கி, மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது என்ற காரணத்தினால் மட்டுமே கைதிகளை விடுவிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்க முடியாது.
இந்த தீர்ப்பில் கூறியுள்ளபடி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு 25 அல்லது 30 ஆண்டுகள் கூட ஆகலாம். அது போன்ற தருணங்களில் மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டைத் தான் நாட வேண்டிய சூழல் உருவாகும். இது, ஏற்கனவே நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.
சிறை நிர்வாகம் என்பது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டதாகும். சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளின் நடத்தை குறித்து மத்திய அரசை விட மாநில அரசிடம் அதிக தகவல்கள் இருக்கும். இந்த நிலையில் நடத்தையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வது என்பதை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது ஏற்புடையதாக இருக்காது, மேலும் இது போன்ற விஷயங்களில் மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு 'ரிட்' மனு தாக்கல் செய்வதற்கு முகாந்திரம் கிடையாது.
எனவே, சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications