சோனியா மருமகன் வதேரா நிறுவனம் மீது சி.பி.ஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சோனியாகாந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, ஹரியானாவில் உள்ள குர்கான் அருகே ஷிகோபுர் என்ற இடத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை மிக குறைந்த விலை கொடுத்து வாங்கியதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்

ஹரியானா அரசு விசாரணை
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க ஹரியானா அரசு 3 பேர் கொண்ட குழுவை நியமித்தது.
அசோக் கெம்கா அறிக்கை
இந்த நில மோசடி மீது நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா, விசாரணை குழுவிடம் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், போலியான ஆவணங்களை கொடுத்து ராபர்ட் வதேரா மோசடியில் ஈடுபட்டதாகவும், பத்திரப்பதிவுத் துறையை ஏமாற்றி பல கோடி ரூபாயை அவர் சம்பாதித்துள்ளதாகவும் கெம்கா தெரிவித்து இருந்தார்.
சிபிஐ விசாரணை கோரி வழக்கு
இந்த மோசடியில் வதேராவின் 6 நிறுவனங்கள் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராபர்ட் வதேராவின் நிறுவனங்களின் வணிக தொடர்புகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என கோரி எம். எல்.சர்மா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
தள்ளுபடி
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கி.ரோகிணி, நீதிபதி ஆர்.எஸ் எண்ட்லா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வதேரா நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications