கடைசி பந்தில் இம்ரான் கான் அவுட்! அடுத்த களமிறங்கும் பிரதமர் யார்? காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
இஸ்லாமாபாத் : கடைசி பந்து வரை அடித்து ஆடுவேன் எனக் கூறிய இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து எதிர்கட்சிகளால் தூக்கியடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பிரதமராக பொறுப்பேற்கவுள்ளவருக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? அதனை சமாளிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 28-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
வழக்கின் முடிவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, நேற்று நள்ளிரவு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் 1.30 மணிபோல் அறிவிக்கப்பட்டன. தீர்மானத்தில் 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இம்ரான் கான் தோல்வி
174 உறுப்பினர்கள் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதன்மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் இம்ரான் கான். இதன் மூலம் பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுமையாக ஆட்சி செய்ததில்லை என்ற வரலாறு மீண்டும் திரும்பியதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியை இழந்த முதல் பிரதமர் என்ற மோசமான சாதனையை இம்ரான் கான் படைத்துள்ளார்.

நாட்டில் சவால்கள்
அடுத்த பிரதமராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், இம்ரான் முன் நின்ற அதே சோதனைகளைத் தான் அவர்களும் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே உண்மை. மோசமான செயல்திறன் கொண்ட பொருளாதாரம், நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் முன்னாள் நட்பு நாடுகளுடன் தற்போது இருக்கும் மோசமான உறவுகள் ஆகியவை அடுத்த நிர்வாகத்திற்கு நெருக்கடி அளிப்பதில் முன்னிலையில் உள்ளன. அவை வரவிருக்கும் அரசாங்கத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவு நிலைகளில் பல சவால்களை ஏற்படுத்தும்.

மோசமான பொருளாதாரம்
220 மில்லியன் மக்கள் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமருக்கு வரவிருக்கும் முக்கிய சிக்கல்களாக
பொருளாதாரம், கடன், பணவீக்கம் மற்றும் பலவீனமான நாணய மதிப்பு உள்ளது. இந்த பிரச்சினைகள் இணைந்துதான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை தேக்க நிலையில் வைத்திருக்கின்றன. பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் எகனாமிக்ஸ்-ன் துணைவேந்தர் நதீம் உல் ஹக் கூறுகையில், "பொருளாதாரத்தை மாற்றுவதற்கு தீவிரமான கொள்கை சீர்திருத்தங்கள் தேவை." என்கிறார். நாட்டில் பணவீக்கம் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, வெளிநாட்டுக் கடன் $130 பில்லியனாகவும், டாலருக்கு நிகரான ரூபாய் 190 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் தீவிரவாதம்
அடுத்ததாக கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள் பாகிஸ்தானின் உள்ளூர் தீவிரவாதிகளுடன் இணைந்து கடந்த சில மாதங்களில் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ரமலானின் போதும் கூட அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதலை அவர்கள் தொடங்கினார். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் பாகிஸ்தான் நாட்டை வெளிநாட்டு தீவிரவாதிகளின் தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அது தான் பெரிய சிக்கல் என்பது தான் கவனிக்கத்தக்கது.

மற்ற நாடுகளுடன் நட்பு
எதிர்கட்சிகளுடன் சதி செய்வதன் மூலம் அமெரிக்கா தன்னை நீக்கியதாக இம்ரான் கான் கூறினார். மேலும் இந்தியாவுடனான ரஷ்யாவின் வர்த்தகத்தை எதிர்க்கும் அமெரிக்காவுடன் உறவுகளை சரிசெய்ய அடுத்த பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையாக உழைக்க வேண்டும். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நாளில் மாஸ்கோவிற்கு இம்ரான் பயணம் செய்ததன் மூலம் இம்ரான் கான் மேற்குலக நாடுகளை கோபப்படுத்தினார், மேலும் சீனாவின் மனித உரிமைகள் பதிவை எதிர்த்து மற்றவர்கள் புறக்கணித்தபோது பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்கத்தில் கலந்து கொண்ட சில உலகத் தலைவர்களில் ஒருவராகவும் இம்ரான் இருந்தார். எந்த நாட்டுடன் நட்பு பாராட்டினாலும் மற்றொரு நாடு பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications