மகளிர் ஆணையம் அதிரடி.. வளைகுடாவுக்கு கடத்தப்படவிருந்த 16 நேபாள இளம் பெண்கள் மீட்பு
டெல்லியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த நேபாள பெண்கள் 16 பேர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
டெல்லி: டெல்லியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த நேபாளத்தைச் சேர்ந்த 16 பெண்கள் டெல்லி மகளிர் ஆணையத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள நாட்டைச் சேர்ந்த 16 பெண்கள் இன்று புதன்கிழமை அதிகாலை டெல்லியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவாவிற்கு கிடைத்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்பட இருப்பது குறித்து ஸ்வாதி மலிவால் டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர், போலிஸாருடன் விரைந்து சென்றன் மலிவால் டெல்லியின் தென்மேற்கு பகுதியிலுள்ள முனீர்காவில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்த 16 பெண்களை கண்டறிந்து மீட்டுள்ளார்.
நேபாள பெண்கள் கடத்தப்பட இருந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாதி மலிவால், "வளைகுடா நாடுகளில் வேலை வாங்கித்தருவதாக பொய்யான காரணங்கள் கூறி இந்த 16 பெண்களும் கடத்தல்காரர்களால் நேபாளத்திலிருந்து டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் இந்த பெண்களின் பாஸ்போர்ட்டுகளை திருடி வைத்துக்கொண்டு பெண்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதே போல, ஏற்கனவே 15 நாட்களுக்கு முன்னர் சில பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பெண்களைக் கடத்தும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள இடம் காவல்நிலையத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவிலேயே உள்ள நிலையில் போலீசாருக்கு எப்படி இது தெரியாமல் போனது" என்று ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட நேபாள பெண்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் கடத்தல்காரர்களைப் பற்றி விசாரிக்கப்பட்டுவருகிறது. கடத்தல்காரர்களிடமிருந்து அப்பாவி நேபாள பெண்களை மீட்ட டெல்லி பெண்கள் ஆனையத் தலைவர் ஸ்வாதி மலிவாலுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.