சர்வதேச யோகா தின விழாவில் ஆயுர்வேத மருத்துவர் மாரடைப்பால் மரணம்!!
ஹைதராபாத்: சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனைகள் களைகட்டும் நேரத்தில் ஹைதராபாத்தில் ஒரு சோகமும் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் யோகா பயிற்சிகளின் போது 59 வயது ஆயுர்வேத மருத்துவர் வீர ரெட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனையொட்டி நாடு முழுவதும் நேற்று டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஹைதராபாத்தில் எல்.பி. நகர் அருகே உள்ள சஹாரா எஸ்டேட்ஸ் கம்யூனிட்டி ஹாலிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டி யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவரான சி.ஹெச். வீர ரெட்டியும் பங்கேற்றார்.
அப்போது மூக்கின் வழியாக நீரை உள்ளே இழுத்து வாய் வழியாக வெளியேற்றும் "ஜலநேத்தி" முறையை வீர ரெட்டி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து சஹாரா எஸ்டேட் மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் மோகன் ராவ் கூறுகையில், வீரா ரெட்டி நிகழ்ச்சியை செய்து கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக எல்.பி. நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர் என்றார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர்தான் வீர ரெட்டிக்கு மாரடைப்பால் இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அவரை யோகா செய்ய வேண்டாம் என அறிவுறுத்தவில்லை. இதனால் அவர் தொடர்ந்து யோகா செய்து வைந்தார். இதுவே தற்போது விபரீதமாகவும் முடிவடைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications