இன்று ஓய்வு பெறும் ஆந்திர அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. ரூ.500 கோடி சிக்கியது!
ஹைதராபாத்: ஆந்திர மாநில நகர திட்டமிடல் இயக்குநர் கொல்லா வெங்கட ரகு மற்றும் அவரது பினாமி நல்லூரி வெங்கட சிவபிரசாத் ஆகியோரிடமிருந்து ரூ.500 கோடிக்கும் அதிகமான சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெங்கட ரகு இன்றுதான் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நகர திட்டமைப்பு இயக்குனராக பணியாற்றுபவர் கொல்ல வெங்கட ரகு, விஜயவாடா மாநகராட்சி இளநிலை தொழில்நுட்ப அதிகாரியாக இருப்பவர் நல்லூரி வெங்கடசிவபிரசாத்.
நேற்று இவர்களது வீடுகளில், விசாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணபிரசாத் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர்.

சொத்துக்கள் அபாரம்
இவர்களின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 10 கிலோ தங்கம், 15 ஏக்கர் நிலம், 26 அடுக்குமாடி குடியிருப்புகள், ஷீரடியில் ஒரு லாட்ஜ், 26 காலிமனைகள் என மொத்தம் கணக்கில் வராத ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

போகும் இடமெல்லாம் கை நனைப்பு
கொல்லா வெங்கடரகு நெல்லூர், அனந்தபுரம், விசாகப்பட்டினம், ராஜமகேந்திரவரம், விஜயவாடா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பணி புரிந்துள்ளார். அங்கெல்லாம் மக்கள் பணத்தை வாரி சுருட்டியுள்ளார். அங்குள்ள இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிலத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீடுகளின் மதிப்பு மட்டும் ரூ.4.6 கோடி.

பினாமியையும் விடவில்லை
இவரது பினாமியாக செயல்பட்டு வரும் சிவபிரசாத் வீட்டில் சோதனை நடத்தியபோது, 21 வீடுகள், சிவபிரசாத் மற்றும் அவரது மனைவி காயத்ரி பெயரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், விஜயவாடாவில் 3 வீடுகள், 11.65 ஏக்கர் காலியிடம், ரூ.43 லட்சம் பணம், 7 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் மற்றும் ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அம்மாடியோவ்
மேலும் ரகு மற்றும் சிவபிரசாத் இணைந்து காயத்ரி பெயரில் பல நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். 2 பேரின் வீடுகளில் 75 வங்கிகளின் பாஸ்புக் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.












Click it and Unblock the Notifications